/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூச்சாட்டு விழா கோலாகலம்: மழை வேண்டி பிரார்த்தனை
/
பூச்சாட்டு விழா கோலாகலம்: மழை வேண்டி பிரார்த்தனை
ADDED : மே 10, 2024 11:54 PM

அவிநாசி;அவிநாசி, கைகாட்டிப்புதுாரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பூச்சாட்டு விழாவையொட்டி, நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
மாலையில், கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வறட்சி நீங்கி, பசுமை ஓங்க ஜீவராசிகள் தாகம் தணிக்க மழை பெய்ய வேண்டி அம்மன் பாடலை பாடி அழைத்து கும்மியடித்தனர்.
மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, பொங்கல் வைத்தல், கம்பம் கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 5ம் தேதி கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது.
அதன்பின், 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், கரகம் எடுத்தல், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று, மஞ்சள் நீராட்டுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வழிபாடு மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.