/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியில் முன்னேற்றம்!
/
உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியில் முன்னேற்றம்!
UPDATED : மே 12, 2024 07:01 AM
ADDED : மே 12, 2024 06:42 AM
திருப்பூர், : உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியில் முன்னேற்றம் கிடைத்துள்ளது; லோக்சபா தேர்தல் காரணமாக, வடமாநில ஆர்டர் வரத்து தடைபட்டுள்ளது; விரைவில் சீராகுமென, உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
அரை நுாற்றாண்டுக்கு மேலாக, பனியன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் திருப்பூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, பருத்தி நுாலிழையில் உருவாகும் பின்னல்துணியில் இருந்து தயாரிக்கப்படும் பனியன் ஆடைகளுக்கு திருப்பூர் பெயர் பெற்று விளங்குகிறது.
திருப்பூரில் இருந்து, உள்ளாடை ரகங்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், பெரியர்கள் அணியும் ஆடைகள், முதியோருக்கான இலகுவான ஆடைகள் என, அனைத்து வகையான ஆடைகளும், பின்னல் துணியில் தயாராகிறது. அனைத்து சீசனுக்கும் ஏற்ற பருத்தி நுாலிழை பின்னல் ஆடைகள், நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
உற்பத்தியாகும் பின்னலாடைகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிராவை தாண்டி டில்லி வரையில் விற்பனைக்கு செல்கிறது. பலமாநில சில்லறை வியாபாரிகள், திருப்பூர் வந்து ஆர்டர் கொடுத்து, ஆடைகளை பெற்றுச்செல்கின்றனர். ஏற்றுமதி வர்த்தகம், உலகம் முழுவதும் நடப்பது போல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் திருப்பூர் பின்னலாடைகள் விற்பனைக்கு செல்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தில் தான், பனியன் ஆர்டர் வரப்பெற்று, உற்பத்தி வேகமெடுக்கும். மார்ச் மாதம் துவங்கி, ஜூன் வரையில், உற்பத்தி பரபரப்பாக நடக்கும்; உடனுக்குடன், பல்வேறு மாநிலங்களுக்கு கன்டெய்னர் மற்றும் ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
தேர்தலால் மந்தம்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தேர்தல் பணி துவங்கிவிட்டதால், நலிவு நிலையில் இருந்து மீண்டு வந்த பனியன் தொழிலுக்கு மீண்டும் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக, ஏழு கட்டமாக தேர்தல் நடப்பதால், மார்ச் துவங்கி, ஜூன் 4 ம் தேதி வரை, வடமாநிலங்களுடன் வர்த்தகம் செய்யவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முழு நேரமும் தேர்தல் பணி என்பதால், பனியன் ஆடை வியாபாரமும் அங்கு பாதித்துள்ளது; திருப்பூருக்கு ஆர்டர் வருவதிலும், இங்கிருந்து சரக்கு அனுப்பி வைப்பதிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு வேகத்தில் பனியன் தொழில் இயங்கத்துவங்கும் என்று தொழில்துறையினர் தெரிவித்தனர்.