/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல வாரியத்தில் திருநங்கைகள் பதிவு
/
நல வாரியத்தில் திருநங்கைகள் பதிவு
ADDED : ஜூன் 22, 2024 12:52 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான நலவாரிய பதிவு முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார் பங்கேற்றனர்.
முகாமில், திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலவாரிய அடையாள அட்டை, ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டைக்கான பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள திருநங்கைகள் பங்கேற்றனர்; அவர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் பெற்று, விண்ணப்பித்து, அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருநங்கை, திருநம்பிகள் 10 பேருக்கு நலவாரிய பதிவு ; 6 பேருக்கு நலவாரிய அட்டையில் திருத்தம்; 4 பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம்; 32 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை; 28 பேருக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தம்; 15 பேருக்கு ரேஷன் கார்டில் திருத்தம் செய்யப்பட்டது.
அடையாள அட்டை வழங்கி கலெக்டர் பேசுகையில், 'தாட்கோ மூலம், திருநங்கைகள் சுய தொழில் துவங்குவதற்காக, 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. அழகு கலை, தையல், உணவு பதப்படுத்தும் பயிற்சி, சமையல், போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,' என்றார்.
'திருநங்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என, இந்திரா சுந்தரம் அறக்கட்டளை இயக்குனர் இந்திராசுந்தரம் உறுதி அளித்தார்.