/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணையில் இருந்து 38 நாட்களாக உபரிநீர் வெளியேற்றம்
/
அமராவதி அணையில் இருந்து 38 நாட்களாக உபரிநீர் வெளியேற்றம்
அமராவதி அணையில் இருந்து 38 நாட்களாக உபரிநீர் வெளியேற்றம்
அமராவதி அணையில் இருந்து 38 நாட்களாக உபரிநீர் வெளியேற்றம்
UPDATED : ஆக 25, 2024 05:00 AM
ADDED : ஆக 25, 2024 01:41 AM

உடுமலை;உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணையிலிருந்து, 38 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த, தென்மேற்கு பருவமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த, ஜூலை, 18ல் நிரம்பியது.
வழியோர கிராமங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்வதால், அணைக்கு வரும் நீர் முழுவதும், கடந்த, 38 நாட்களாக உபரியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உபரி நீரை முறையாக பயன்படுத்தும் வகையில், பிரதான கால்வாய் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 18 கால்வாய்களுக்கும் நீர் வழங்கப்பட்டது. ஆற்றின் இரு கரை தொட்டு நீர் சென்ற நிலையில், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன.
நேற்று காலை நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 90 அடி உயரத்தில், 88.26 அடி நீர்மட்டம் இருந்தது.
மொத்த கொள்ளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,889.55 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு, 787 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து, 500 கனஅடி நீர் உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், 'அமராவதி ஆற்றில், 38 நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்டாலும், கரூர் திருமுக்கூடலுாரில், காவிரி ஆற்றில் உபரி நீர் சென்றடையவில்லை.
கரூர் ஒத்தமாந்துறை வரை மட்டுமே சென்றுள்ளது. பாசன பகுதிகளில் போதிய மழையில்லாததால், பாசனத்தை துவக்கும் வகையில், பழைய ஆயக்கட்டு பாசனம், அரவக்குறிச்சி முதல் கரூர் வரை உள்ள, 10 வலது கரை பாசன கால்வாய்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.