/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏவுகணை நாயகனை நினைவு கூர்கிறோம்!
/
ஏவுகணை நாயகனை நினைவு கூர்கிறோம்!
ADDED : ஜூலை 27, 2024 12:27 AM
நல்லரசு என்னவென்று வழிகாட்டினாய்
வல்லரசு ஆவோமென்று திடம் கூட்டினாய்
பறப்பாய்... ஜெயிப்பாய்... சாதிப்பாய் என
தேசத்து இளைஞர்களுக்கு உரமூட்டினாய்
'முடியாது என்ற சொல் அகராதியில் கிடையாது
முயற்சி திருவினையாக்கும்; நமைக் கைவிடாது'
என்று தன்னம்பிக்கையூட்டினாய்
அக்னிச்சிறகே... அணையா விளக்கே
இந்தியத் திருநாட்டின் ஈடிலா உயிரே
அணுவும் உன் சொல் கேட்டது
ஏவுகணையும் உன் கீழ்ப்படிந்தது
அப்துல் கலாம் என்பது மந்திரச்சொல்
புது ரத்தம் பாய்ச்சும் நிரந்தரச்சொல்
வள்ளுவர் போல வாழ்ந்தவர் நீவிர்
வாழும் கலையை உணர்ந்தவர் நீவிர்
காலம் கடந்தும் நம் காலம் சொல்லும்
கலாம்... கலாம்... கலாம்!
அறிவியல் திறனில் சிறப்புற்றாய்
ஆராய்ச்சியில் வலுப்பெற்றாய்
இறையாண்மையை உணர்த்தினாய்
ஈடற்ற தேசப்புதல்வனானாய்
உதவினாய் அன்பின் ஊற்றாய்
உலகுக்கெல்லாம் தலைவனானாய்
ஐயமின்றி நாட்டை வலுவூட்டினாய்
ஒழுக்கத்தில் ஒளிர்ந்தாய்
ஓங்கு புகழ் வளர்த்தாய்
அவ்வை போல் அறிவைப் பகர்ந்தாய்
இஃதன்றோ இந்திய நாடென்று
தேச மக்களைப் பெருமிதம் கொள்ளவைத்தாய்!
கலாம் என்றொலித்தால்
எங்கள் சலாம் என்றென்றும் உனக்கு!
கடின உழைப்பு - நேர்மைக்கு மாற்று
எதுவும் இங்கு இல்லையே...
எண்ணங்களே செயலாகுமே
பெரும் கனவுகள் காண்போமே
வாய்ப்புக்காக காத்திருக்காமல்
வாய்ப்பை உருவாக்குவோமே
கேள்விகள்தான் புத்தாக்கங்களின் ஊற்று
தேடல்கள்தான் புதுப்பாதைகளின் வழி
படிப்பது மட்டுமா கல்வி?
படைப்பாற்றலும் அல்லவா!
சிந்திக்'கலாம்'... சீர்துாக்'கலாம்'
உருவாக்'கலாம்'... சாதிக்'கலாம்'
எங்களிடம் விதைத்தாயே
அன்பின் இனிய கலாம்!