/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்! ரசிகர்கள் பேரார்வம்
/
'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்! ரசிகர்கள் பேரார்வம்
'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்! ரசிகர்கள் பேரார்வம்
'டி20' உலகக்கோப்பை; வெல்லும் நம் தேசம்! ரசிகர்கள் பேரார்வம்
ADDED : ஜூன் 01, 2024 11:10 PM

உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பேரார்வத்துடன் டி20 உலக கோப்பை தொடருக்காக காத்திருக்கின்றனர். இத்தொடர் இன்று துவங்கி, வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ள இப்போட்டிகளில்,அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா அணிகளுடன் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் மோத உள்ளது. ''டி20 உலக கோப்பையை வென்று நம் அணி சாதிக்கும்'' என்ற எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் உள்ளனர். ஒரு மாத கிரிக்கெட் திருவிழா குறித்து, திருப்பூர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள், இதோ...
மிடில் ஆர்டர் கைகொடுக்குமா?
பவித்ரன், புஷ்பா நகர்
இதுவரை அமெரிக்க மைதானங்களில் நம் அணி விளையாடியது குறைவு. ஆடுகளம், டாஸ் வெற்றிக்கு மிக முக்கியம். துவக்கத்தில் வேகமெடுக்கும் அணித்திறமை, 'மிடில் ஆர்டரில்' அவ்வப்போது சரிந்து விடுகிறது. தடுமாற்றம் இல்லாத 'மிடில் ஆர்டர்' அவசியம். தற்போதைய அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டர் விட, பவுலிங் ஆல்ரவுண்டர் அதிகமாக உள்ளனர்.
நான்கு சுழற்பந்து வீச்சாளர் இருப்பதால், வெற்றியை பெரும்பாலும் பந்துவீச்சு தீர்மானிக்குமென எதிர்பார்க்கலாம். அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக, நடராஜன், ருத்ராஜ் கெய்க்வாட் சேர்த்திருக்கலாம். சரியான நேரத்தில் மிடில் ஆர்டர் கைகொடுத்தால், அதிக ரன்களை குவித்து, உலக கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைக்க முடியும்.
உச்சபட்ச ஸ்கோர் எட்டலாம்
வித்யா கீதா, கண்ணகி நகர்
லீக் போட்டிகளில் பாகிஸ்தானுடன் போட்டி மட்டுமே சற்று சிரமமானதாக இருக்கும். அயர்லாந்து, அமெரிக்கா, கனடாவுடன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் 'ரன்ரேட்' பெறுவது இந்திய அணிக்கு சுமையை குறைக்கும். ஐ.பி.எல்., போட்டியில் சிறப்பாக பணியாற்றாத ரோஹித் சர்மா, இந்தியா அணியில் தனக்கான இடத்தை தக்க வைக்க கட்டாயம் திறமை காட்டி அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்.
ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் திறமை நிருபிக்க சரியான ஆடுகளமாக இப்போட்டி அமையும். இருக்கும் அணிகளில் அதிகளவில் சீனியர் வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி உள்ளது. பேட்ஸ்மேன்கள் திறமை காட்டினால், இதுவரை எட்டாத அதிகபட்சம் ஸ்கோரை எட்டி சாதனை புரிய இம்முறை வாய்ப்புள்ளது.
சிறப்பாக ஆடினால் வெற்றி உறுதி
ஜெனீபர், கொங்கு நகர்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கே.கே.ஆர்.,) அணியில் இடம் பெற்ற ஸ்ரேயாஸ், பேட்டிங்கில் அசத்திய, ஐ.பி.எல்., கோப்பையை கைப்பற்றி, வெற்றிக்கு வித்திட்டார். ஆனால், அவரை அணிக்கு தேர்வு செய்யாதது பேட்டிங்கில் ஏமாற்றத்தையளிக்கிறது. கடந்த, 2007ல் பாகிஸ்தான் அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி டி-20 உலக கோப்பையை வென்றது. அதன் பின், ஏழு உலக கோப்பை போட்டிகளில், 11 ஆண்டுகளாக இந்தியா அணி கோப்பையை வெல்லாமல் உள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றம். அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அணிக்கு வெற்றி நிச்சயம். அனுபவ, இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டால் கோப்பையை, தட்டி துாக்குவது உறுதி.
அதிக ரன்கள் எடுப்பது அவசியம்
சவுமியா, கொடிக்கம்பம், திருப்பூர்
புதிய ஆடுகளம் என்பதால், டாஸ் முதல் கடைசி ஓவர், கடைசி பந்து வரை கணிப்பு, திட்டமிடல் அவசியம். சில வேகப்பந்து வீச்சுக்கும், மற்றவை சுழற்பந்து வீச்சுக்கும் கைகொடுக்கலாம். இரண்டு சூழலுக்கு ஏற்ற வகையில், வீரர்கள் முக்கியம். திறமை காட்டக்கூடிய ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வு செய்திருக்கலாம். வெற்றிக்கு ஸ்கோர் மிக முக்கியம். முன்பே திட்டமிட்டு அதிக ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன், முடிந்த வரை பவுலர்களும் தயாராகியிருக்க வேண்டும். ரன் அதிகம் என்றாலே பாதி வெற்றி உறுதியாகிவிடும். சீனியர் வீரர்களாக உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி நிச்சயம் இந்திய அணிக்கு கோப்பையை வென்று தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
---
டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் திருப்பூர் ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.(செய்தி உள்ளே)