/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயத்தின் எதிர்காலம்? பல்கலை மாணவர்கள் கருத்து!
/
விவசாயத்தின் எதிர்காலம்? பல்கலை மாணவர்கள் கருத்து!
விவசாயத்தின் எதிர்காலம்? பல்கலை மாணவர்கள் கருத்து!
விவசாயத்தின் எதிர்காலம்? பல்கலை மாணவர்கள் கருத்து!
ADDED : மார் 07, 2025 03:42 AM

பல்லடம்; தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள், பல்லடம் - மாணிக்காபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அர்ஜுனன் என்பவரது தோட்டத்தில், 11 பேர் கொண்ட மாணவர் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளிடம், வேளாண் மாணவர்கள் கூறியதாவது:
வேளாண் பல்கலை வாயிலாக, நாங்கள் என்னதான் படித்தாலும், களத்தில் உள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நேரடியாக தெரிந்து கொள்வது மிக முக்கியம். பாரம்பரியமாக விவசாயத் தொழில் செய்து வருபவர்கள் மட்டுமே இதில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் படித்து வேறு வேலைக்குச் சென்று விடுகின்றனர். விவசாய தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை.
உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால், எதிர்காலத்தில் வேலையே கிடைக்கவில்லை என்றாலும், விவசாயத் தொழிலை செய்யும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற ஒரு சுய வேலைவாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது. எனவே, விளை நிலத்தில் நீங்கள் மேற்கொண்டு வரும் செயல்முறைகளை நாங்கள் தெரிந்து கொண்டால் தான், எதிர்காலத்தில் நாங்களும் விவசாயிகளாக முடியும். வேளாண்மையை அதிகப்படுத்தவே நாங்களும் இக்கல்வியை கற்று வருகிறோம். இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எங்களது தொழில்நுட்பத்தை நாங்கள் கூறுகிறோம்; உங்களின் அனுபவத்தை நீங்கள் எங்களுக்கு கொடுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, தென்னைக்கு ஊட்டச்சத்து 'டானிக்' கொடுக்கும் முறை குறித்து, பல்கலை மாணவர்கள், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அமுதா, வேளாண் விதை சான்று அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் பங்கேற்றனர்.