பல்லடம்;-பல்லடம், மங்கலம் ரோட்டில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த செல்வ விநாயகர் மற்றும் பாலதண்டபாணி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், பல ஆண்டு களாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் பாலாலய நடத்தப்பட்டு, கோவிலின் பழைய கட்டடங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன.
பாலாலயம் முடிந்ததால், எப்படியும் திருப்பணி துவங்கிவிடும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், வரைபட அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இதனால், ஒரு ஆண்டாகவே திருப்பணி கிடப்பில் போடப்பட்டது. கோவில் கட்டுமான பணிகள் துவங்க வேண்டிய இடத்தில் களைச்செடிகள் முளைத்து வந்தன.
இச்சூழலில், அறநிலையத்துறையின் ஒப்புதல் கிடைத்ததால், பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. கோவில் விழா குழுவினர், பக்தர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். திருப்பணிகளை விரைவுபடுத்தி, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.