/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரம் உயர்ந்தும் அந்தஸ்து உயராத நகராட்சிகள்
/
தரம் உயர்ந்தும் அந்தஸ்து உயராத நகராட்சிகள்
ADDED : மே 28, 2024 09:47 PM
திருப்பூர்:தமிழகத்தில், 2004க்கு பின் பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள் வசம், கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகள் ஒப்படைக்கப்படாமல் இருப்பது, அந்தஸ்து குறைவாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் கிராம ஊராட்சிகள், பேரூராட்சியாகவும், பேரூராட்சிகள், நகராட்சியாகவும், நகராட்சிகள், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. 2004ல் துவங்கி, 2021 வரை, 108 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில், அதன் எல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள்; அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கொண்டு வரப்பட்டு, நகராட்சி பள்ளிகளாக அவை மாற்றப்பட வேண்டும்.
ஆசிரியர் நியமனம், மேற்பார்வை செய்வது ஆகியவை, கல்வித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பள்ளி கட்டட பராமரிப்பு, உட்கட்டமைப்புகளை பலப்படுத்துவது மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி, கல்வித்தரம் மேம்படுத்த, கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற பொறுப்புகள் நகராட்சிகள் வசம் ஒப்படைக்கப்படும்.
அதேபோல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும், நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்; கட்டமைப்பு மேம்படுத்துவது, கூடுதல் மருத்துவ வசதிகளை கொண்டு வருவது போன்ற பணிகளை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்வர். கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகராட்சிகள், இப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.
ஆனால், 2004க்கு பின் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளின் கட்டுப்பாட்டில், அதன் எல்லைக்குட்பட்ட பள்ளிகள், இதுவரை கொண்டு வரப்படவில்லை. மாறாக, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளி கட்டடங்கள், ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டிலும்; உயர், மேல்நிலைப்பள்ளி கட்டடங்கள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுமே உள்ளன.
கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கில் தான், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில், அதற்கான பணிகள் நடைமுறையில் இல்லாதது, நகராட்சி நிர்வாகத்தினர் மத்தியில் அந்துஸ்து குறைவாக கருதப்படுகிறது. எனவே, நகராட்சிகளுக்கு உரிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.