/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலத்தின் கட்டாயமாகும் நீர்நிலை பாதுகாப்பு ;அரசு துறைகள் ஒருங்கிணைந்தால் சிறப்பு!
/
காலத்தின் கட்டாயமாகும் நீர்நிலை பாதுகாப்பு ;அரசு துறைகள் ஒருங்கிணைந்தால் சிறப்பு!
காலத்தின் கட்டாயமாகும் நீர்நிலை பாதுகாப்பு ;அரசு துறைகள் ஒருங்கிணைந்தால் சிறப்பு!
காலத்தின் கட்டாயமாகும் நீர்நிலை பாதுகாப்பு ;அரசு துறைகள் ஒருங்கிணைந்தால் சிறப்பு!
ADDED : மே 05, 2024 12:03 AM

பல்லடம்;அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, நீர்நிலைகளை பாதுகாத்து, எதிர்கால தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புவி வெப்பமடைதல் என்பது, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் மிகப்பெரும் சவாலான காரியமாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், மரங்கள் வெட்டப்படுவது, காற்று மாசு, நீர்நிலைகளை அழிப்பது உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால், புவி வெப்பமடைவது தடுக்க இயலாத ஒன்றாக உள்ளது.
ஆண்டுதோறும் சீதோஷ்ண நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிகப்படியான பனிப்பொழிவு, அதிக வெப்பம், பருவ காலத்தில் மழை பெய்யாதது உள்ளிட்ட பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தற்போது வெப்பநிலை, 100 டிகிரியை கடந்து, வெளியே நடமாட முடியாத அளவுக்கு, அனல் காற்று வீசி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, மழை நீரை சேமிக்காமல் அலட்சியம் காட்டியதன் விளைவு இன்று நீர்நிலைகள் அனைத்தும் வானம் பூத்த பூமியாக மாறி, கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த பருவ மழை வரும் வரை கோடை காலத்தை சமாளிப்பது என்பது மிகப்பெரும் சவாலான காரியமாக உள்ளது.
நீர் நிலைகளின் அவலம்?
காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளை தவிர்த்து, அதன் பிறகு வந்த ஆட்சியாளர்கள் யாரும் அணைகள் கட்டவோ, குளங்கள் வெட்டவோ அக்கறை காட்டவில்லை. மாறாக, இருக்கின்ற குளம், குட்டைகள், நீர் நிலைகளை மூடியது தான் இதுவரை ஆண்டவர்களின் சாதனையாக உள்ளது.
நீர்நிலைகளை துார்வாறுவதாக கூறி, வண்டல் மண் எடுத்து குளம், குட்டைகள் ஆழமானது மட்டுமே மிச்சம். குளம், குட்டைகள் நிரம்பி வழிந்து, நீர் வழித்தடம் வழியாக அடுத்த நீர் ஆதாரங்களை தேடிச் சென்று நிரப்பும் அளவுக்கு முந்தைய காலங்களில் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டன.
ஆனால், நீர் ஆதாரங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதன் விளைவாக, இன்று, குளம், குட்டைகளுக்கு நீரை எடுத்துச் செல்ல வேண்டிய வழித்தடங்கள் அனைத்தும் மாயமாகிவிட்டன. பெயரளவுக்கே, குளம் குட்டைகள் காட்சியளித்து வருகின்றன.
நகரப் பகுதியில் உள்ள நீரோடைகள், குட்டைகள் உள்ளிட்டவை, சாக்கடை கழிவுகள், குப்பைகளை நிரப்பும் கிடங்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
போர்க்கால நடவடிக்கை தேவை!
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இத்துடன், கடும் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. பருவ மழைகளின் மூலம் கிடைக்கும் தண்ணீரை சேகரித்து வைத்தால் தான் அடுத்து வரும் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும் என்பதை, அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்களும்உணர்வதில்லை.
'மழை நீரை சேகரிப்போம்; நிலத்தடி நீரை பாதுகாப்போம்' என்ற வாசகம் பேச்சளவுக்கு மட்டுமே உள்ளது. எதிர்வரும் ஆண்டின் கோடை காலத்தை சமாளிக்க இப்போதே திட்டமிட வேண்டியது அவசியம். இதன்படி, பருவ மழைகளின் போது கிடைக்கும் மழை நீரை சேகரித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு, பெயரளவுக்கு நீர்நிலைகளை துார்வாராமல், நீர் வழித்தடங்களை மீட்டெடுத்து, துார்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.
அரசும், அரசு அதிகாரிகளும் இதை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மழை நீரை சேமிக்காமல்
அலட்சியம் காட்டியதன் விளைவு இன்று நீர்நிலைகள் அனைத்தும் வானம் பூத்த பூமியாக மாறி, கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த பருவமழை வரும் வரை கோடை காலத்தை சமாளிப்பது என்பது மிகப்பெரும் சவாலான காரியமாக உள்ளது