ADDED : மார் 31, 2024 12:35 AM
திருப்பூர்:கடந்த, 2021 சட்டசபை தேர்தல் முடிந்த சமயம்; தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது. அவிநாசி சட்டசபை தொகுதியில், முன்னாள் சபாநாயகர் தனபால், வெற்றி பெற்றார்.
'அ.தி.மு.க.,வில் சீனியரான அவர், தி.மு.க.,வில் இணைகிறார்' என்ற தகவல் பரவ, அரசியல் பரபரப்பு அவிநாசியை மட்டுமின்றி, மாநிலம் முழுக்க எதிரொலித்தது.
அதுவரை செய்தியாளர் சந்திப்பையே நடத்தாத அவர், உடனடியாக அவிநாசியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் வந்து, செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ''நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசி. எம்.ஜி.ஆர்., தான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தார். நான் அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசி; ஏழாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். நான் கட்சி மாறப்போவதாக வந்த தகவல், யாரோ கிளப்பிவிட்ட புரளி'' என, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கடந்தாண்டு, ஜூன் மாதம், நடிகர் வடிவேலு நடித்த 'மாமன்னன்', சினிமா வெளியானது. இதில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வடிவேலு, அரசியலில் கால்பதித்து, சட்டமன்றத்தில் சபாநாயகராக அமர்வதாக, கதை படமாக்கப்பட்டிருந்தது. இந்த கதாபாத்திரம், 'முன்னாள் சபாநாயகர் தனபாலை மையபடுத்தியே படமாக்கப்பட்டிருக்கிறது' என்ற சர்ச்சை கிளம்ப,''நான் மனசாட்சி படி தான், என் அரசியல் பணியை செய்து வந்துள்ளேன்; 'மாமன்னன்' சினிமா என்னை தழுவி எடுக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சி தான்' என்றார்.
இவ்வாறு, அடிக்கடி சர்ச்சைகளுக்கு ஆளாகும் தனபால், 'தொகுதி பக்கம் தலைகாட்டுவதே இல்லை' என்பது தான் தொகுதி மக்களின் குறையாக உள்ள நிலையில், அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நீலகிரி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ராசிபுரம் சட்டசபை தொகுதியில், ஒரு முறை; சங்ககிரி சட்டசபை தொகுதியில், நான்கு முறை, அவிநாசி தொகுதியில், தற்போது, 2வது முறை என, ஏழு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த தனபாலின் அரசியல் அனுபவம் தான், அவரது மகனுக்கான தேர்தல் துருப்புச்சீட்டாக இருக்குமா?
