/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களுக்கும் 24 மணி நேர மும்முனை மின்சாரம்!
/
கிராமங்களுக்கும் 24 மணி நேர மும்முனை மின்சாரம்!
ADDED : ஜன 07, 2024 02:20 AM
உடுமலை:கிராமங்களுக்கும், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டும், மின் வாரியம் கண்டு கொள்ளவில்லை.
தமிழக மின் வாரியத்தில், கிராமங்களுக்கு பெரும்பாலும் இரு முனை மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. விவசாய பயன்பாட்டிற்காக, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயத்திற்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில், தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில், விவசாய பயன்பாடு உட்பட கிராமங்களுக்கும், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும், என, மின் வாரியத்துக்கு கடந்த மாதம், 29ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை மின் வாரியம் செயல்படுத்த வேண்டும், என்ற விதி இருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
மின் கட்டண உயர்வுக்கு அனுமதி கொடுத்ததும், உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் மின் வாரிய அதிகாரிகள், இந்த உத்தரவை, 10 நாட்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.
கிராமங்களுக்கும், 24 மணி நேரமும், மும்முனை மின் வினியோகம் செய்யப்படும் போது, விவசாயிகள் பயன்பெறுவர்.
கிராமங்களில்,சிறு, குறு தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாகும்.
எனவே, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசும், மின் வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் வாரியம், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க, எந்த விதமான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தேவையில்லை. இதனால், கூடுதல் செலவு ஏற்படாது.
இதன் வாயிலாக, மின் வாரியத்திற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, 'பீக் ஹவர்ஸ்' மின் அழுத்த பிரச்னை, டிரான்ஸ்பார்மர், துணை மின் நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் தவிர்க்கப்படும். உத்தரவை செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை,' என்றார்.