/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு ஊழியர் 400 பேர் கைது
/
சத்துணவு ஊழியர் 400 பேர் கைது
ADDED : ஜன 21, 2026 07:13 AM

திருப்பூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த, 2021ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்தம், நான்கு நாட்கள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர். நேற்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என ஆயிரம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, கலெக்டர் அலுவலகம் முன், மறியல் போராட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எலிசபெத் தலைமை வகித்தார். செயலாளர் நிர்மலா முன்னிலை வகித்தார்.
சத்துணவு ஊழியர்களின், 43 ஆண்டு கால கோரிக்கை மற்றும் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியமாக வழங்கவேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை 5 லட்சம் ரூபாயும்; சமையலர், உதவியாளர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என, கோஷமிட்டனர்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் - திருப்பூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட, 400 பேரை கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.
சத்துணவு ஊழியர்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு தயாரித்து வழங்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக, காலை சிற்றுண்டி திட்டத்தில் உணவு தயாரிக்கும் மகளிர் குழுவினர் வாயிலாக, மதிய உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.

