/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
41,353 கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு வாங்கவில்லை!
/
41,353 கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு வாங்கவில்லை!
ADDED : ஜன 18, 2024 12:40 AM
திருப்பூர் : ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 41,353 குடும்பங்கள் பரிசு தொகுப்பு பெறவில்லை. அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல், வழக்கமான குடிமை பொருள் வினியோகம் துவங்கியுள்ளது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில், ரேஷனில் அரிசி பெறும் 7 லட்சத்து 97 ஆயிரத்து 616 கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
மாவட்டத்திலுள்ள, 1,135 ரேஷன் கடைகளிலும், வழக்கமான குடிமை பொருள் வழங்கல் நிறுத்தப்பட்டு, கடந்த 10ம் தேதி முதல், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கி, முடிந்தது. தகுதியுள்ள அரிசி கார்டுகளில், 94.4 சதவீதம், அதாவது 7 லட்சத்து 56 ஆயிரத்து 263 குடும்பங்கள் மட்டுமே பொங்கல் பரிசு பெற்றுள்ளன; 41,353 குடும்பங்கள் பரிசு தொகுப்பு பெறவில்லை.
கடந்த 15, 16 தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறைக்குப்பின் ரேஷன் கடைகள் நேற்றுமுதல் செயல்பட துவங்கியது. அரசு தரப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை நீட்டித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு கணக்கை முடித்து, ரொக்கம், கரும்பு ஆகியவற்றை கூட்டுறவுத்துறையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர். நேற்று முதல் வழக்கமான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் துவங்கியுள்ளது.