ADDED : டிச 14, 2024 11:39 PM

திருப்பூர்: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில் மாணவ, மாணவியரின் அறிவாற்றல் வெளிப்பட்டது.
கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது. புத்தக படிப்புடன் மாணவர்களுக்கு பொது அறிவு உள்ளிட்ட கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படும் இந்த இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும், பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். போட்டி தேர்வு உட்பட பொது அறிவு சார்ந்த தேர்வுகளை எதிர்கொள்ள, இந்த இதழ் உதவுவதால், இதை பயிற்றுவிப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
இந்தாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடைபெற்று வருகிறது; எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது; சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது. இதில் பங்கேற்க கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் முன்பதிவு செய்துள்ளன; பள்ளிகள் தோறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் இடையே அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்பட இருக்கிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
அவ்வகையில், திருப்பூர், காங்கயம் ரோடு, புதுப்பாளையம் பகுதியில் உள்ள கொங்கு மெட்ரிக் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதி சுற்றுக்கான போட்டியில், 54 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'எச்' அணியில் இடம் பெற்ற, 9ம் வகுப்பு மாணவி வர்ஷா, 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீ தர்ஷிணி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் சந்திரசேகர், முதல்வர் சுந்தர வடிவு, 'பட்டம்' வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, பிரீத்தி, யசோதா ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.