/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரிய தீவிபத்துகள் இல்லாத தீபாவளி
/
பெரிய தீவிபத்துகள் இல்லாத தீபாவளி
ADDED : அக் 24, 2025 12:05 AM
திருப்பூர்: தீபாவளி கொண்டாட்டங்களின்போது, பட்டாசு, தீக்காயம் பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பத்து படுக்கைகளுடன் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டது.
தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சைக்கு ஏற்பாடுகள், மருந்து, மாத்திரை இருப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
கடந்த, 19ம் தேதி இரவு துவங்கி, 21ம் தேதி இரவு வரை தீக்காய சிகிச்சைக்கு சிகிச்சை பெற, 19 பேர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இவர்களில், நால்வர் ஒருநாள் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, குணமான பின், மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
காங்கயம் தலைமை அரசு மருத்துவமனை உட்பட தாலுகா மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக யாரும் அனுமதிக்கப்பட வில்லை; புறநோயாளிகள் பிரிவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டும் தீக்காய சிகிச்சை பெற்று திரும்பினர்.
திருப்பூர் மாவட்டத்தில், அவசர சிகிச்சைக்கான, 108 ஆம்புலன்ஸ்கள் 31 உள்ளன.
மாவட்டத்தின் பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தீக்காயம் பட்டவரை உடனடி மருத்துவமனைக்கு அழைத்து வர ஏதுவாக, ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வழக்கமாக தினசரி, 115 - 125 அழைப்புகள் வரும். தீபாவளி நாளில், 259 அழைப்புகள் வந்துள்ளன.
அவற்றில் இரண்டு மட்டுமே சிறிய அளவிலான பட்டாசு தீக்காய உதவிக்கென வந்துள்ளது; மற்ற 257 அழைப்புகள் பிரசவம், உடல்நல குறைபாடு, குழந்தைகள் நலன், சாலை விபத்து போன்றவையாக அமைந்தது.
பெரிய அளவிலான தீ விபத்து, தீக்காய சிகிச்சைக்கான அனுமதி இல்லாமல் தீபாவளி பண்டிகை முடிவடைந்ததால், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

