ADDED : அக் 30, 2024 12:11 AM

அவிநாசி : அவிநாசியில், கால்நடை மருத்துவமனை முன் குப்பை மேடாக இருந்த நெடுஞ்சாலைத்துறை காலியிடத்தில், 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இப்பகுதியில், தமிழக அரசின் கால்நடை மருத்துவமனை, வணிகவரித்துறை ஆகிய அரசு சார்ந்த அலுவலங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில், சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து பல ஆண்டுகளாக கொட்டி வந்தனர். அதனை அவ்வப்போது தீ வைத்து சிலர் எரித்து விடுவதும் உண்டு.
அந்த சமயத்தில், புகை மண்டலம் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். அதேபோல், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி முன், நெடுஞ்சாலைத்துறையினரின் இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தரணிதரன் கூறுகையில், ''நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை மற்றும் மழைப்பொழிவை தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.
அவ்வகையில், இதுவரை 250 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். மீதமுள்ள இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும்,'' என்றார்.