ADDED : அக் 07, 2024 01:17 AM

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக, விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், ஒவ்வொரு மாதமும், தோட்டக்கலைத்துறை, வட்டாரம் வாரியாக கண்காட்சி அமைக்கிறது. கடந்த கூட்டத்தின் போது, காங்கயம் வட்டார தோட்டக்கலை, கண்காட்சி அமைத்திருந்தது.
நுாற்றுக்கணக்கான விவசாயிகள், வெள்ளை தாய்லாந்து, கருப்பு தாய்லாந்து மற்றும் சிவப்பு தாய்லாந்து ரகம் என, கிழங்குடன் காட்சிப்படுத்தியிருந்த மரவள்ளி குறித்து கேட்டறிந்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஷ்குமார், விவசாயிகளுக்கு, பக்குவமாக அவ்விவரத்தை கூறிக்கொண்டே இருந்தார்.
மரவள்ளி சாகுபடிக்கு, தாய்லாந்து ரக வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு ரகங்களையே விவசாயிகள் தேர்வு செய்கின்றனர். மற்ற ரகங்களை விட, தாய்லாந்து ரகங்கள், எக்டருக்கு, 25 டன் அளவுக்கு மகசூல் கொடுக்கிறது.
சேலத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள், மரவள்ளிக்கிழங்கை, டன் கணக்கில் கொள்முதல் செய்கின்றன. உள்ளூர் ரகமான முள்ளிவாடி ரகம், 'சிப்ஸ்' தயாரிக்க செல்கிறது. ஒரு டன் 7,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாயை லாபமாக பெற முடியும்.தோட்டக்கலை மூலமாக, மரவள்ளி சாகுபடிக்கான சொட்டுநீர் கட்டமைப்புக்கும், மரவள்ளி செடி நோய் தாக்கல் மீதான தடுப்பு நடவடிக்கைக்கும் மானியம் வழங்கப்படுகிறது என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
