ADDED : டிச 04, 2025 08:02 AM
மாநகராட்சி குப்பை விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்த திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் வேலுசாமி கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் குப்பையை, மாநகராட்சி எல்லைக்குள்ளேயே கையாண்டு, அப்புறப்படுத்த வேண்டும்; அதற்காக, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க, ஒவ்வொரு வார்டிலும், 2 உரம் தயாரிப்பு கூடம்; மக்காத பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்த, 2 மறுசுழற்சி பொருள் சேகரிப்பு கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஐகோர்ட் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்த மான சில இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன; அவற்றில் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தகைய இடங்களை மீட்டெடுத்து, அங்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்குரிய கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், அந்த இடங்கள் குறித்த பட்டியலையும், ஐகோர்ட்டில் சமர்பித்துள்ளோம்.
திருப்பூர் மட்டுமின்றி மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சுகாதாரம், மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், திருப்பூர் குப்பைபிரச்னை தொடர்பான வழக்கு, தமிழகத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறோம்.

