/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்கிங் சென்றவர் கொலை; கூலிப்படையினர் கைது
/
வாக்கிங் சென்றவர் கொலை; கூலிப்படையினர் கைது
ADDED : டிச 05, 2024 06:25 AM

அவிநாசி; அவிநாசியில் வாக்கிங் சென்ற நபரை கொன்ற கூலிப்படையினர் ஐவரை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசிகவுண்டன் புதுார், தாமரை கார்டன் பகுதியில் வசித்தவர் ரமேஷ், 45. கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
கடந்த முதல் தேதி இப்பகுதியில் உள்ள சேலம் - கொச்சி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வாக்கிங் சென்ற ரமேைஷ ஐந்துக்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது. செங்கப்பள்ளி மற்றும் கணியூர் டோல்கேட் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலையாளிகள் காரில் தப்பியது தெரியவந்தது.
போலீசார் திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் கோபாலகிருஷ்ணன், 35 (தற்போது திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் வசிக்கிறார்), மன்னார்குடி அஜித், 27, சிம்போஸ், 23, சரண், 24 , தேனி மாவட்டம் சில்லுவார்பட்டி ஜெயபிரகாஷ், 45 (தற்போது திருப்பூர் சிறுபூலுவபட்டி பகுதியில் வசிக்கிறார்) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இவர்கள் வந்த 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் கூலிப்படையினராக செயல்பட்டவர்கள்; கொலைக்கு மூளையாக செயல்பட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் ஜெயபிரகாஷிடம் கொலை செய்வதற்கான திட்டத்தை கூறி பணம் கொடுத்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷ் மூலம் கோபாலகிருஷ்ணன், அஜீத், சிம்போஸ், சரண் ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். கொடுக்கல் - வாங்கல் பிரச்னையில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.