ADDED : மே 21, 2026 09:05 AM

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பழைய பி.எஸ்.என்.எல்., அலுவலக கட்டடத்தில், நிரந்தர ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளதால், பொதுமக்கள், இந்த ஆதார் சேவை மையத்தை எளிதில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக உள்ளது.
இதன் காரணமாக, ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக, பொதுமக்கள் இந்த ஆதார் சேவை மையத்தை நாடுகின்றனர்.
இவ்வாறு, ஆதார் சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள், கைரேகை, கண் கருவிழி பதிவு உள்ளிட்டவற்றால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அவ்வாறு, காத்திருக்கும் பொதுமக்கள் வசதிக்காக, இங்கு, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இது குறித்து பா.ஜ., மாவட்ட ஊடகப்பிரிவு துணைத் தலைவர் வித்ய பிரகாஷ், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு அளித்துள்ள புகார் மனு: பல்லடம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் சேவை மையத்தில், இருக்கைகள், மின் விசிறி, விளக்கு உள்ளிட்ட வசதிகள் கிடையாது. இது, சேவைகளை பெறுவதற்காக காத்திருக்கும் பொது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வயதானவர்கள், பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிரந்தர ஆதார் சேவை மையத்தில், இருக்கைகள், மின்விசிறி, விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
