தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயல்பை தாண்டிய கோடை மழை

இயல்பை தாண்டிய கோடை மழை

இயல்பை தாண்டிய கோடை மழை


ADDED : மே 26, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2025 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: இயல்பை தாண்டி பெய்துவரும் கோடை மழையால், திருப்பூர் மாவட்டத்தில், வெப்பம் தணிந்து, குளிர்ச்சி பரவியுள்ளது. நிலத்தடி நீர் செறிவூட்டப்பட வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், 618.2 மி.மீ., என்பது ஆண்டு சராசரி மழை அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. குளிர் காலமான, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 14 மி.மீ., - மார்ச் முதல் மே வரையிலான கோடையில், 135.10; ஜூன் - செப்., வரையிலான தென் மேற்கு பருவத்தில், 154.80 மி.மீ., - அக்., முதல் டிச., வரையிலான வடகிழக்கு பருவத்தில், 314.30 மி.மீ., இயல்பான மழை அளவாக உள்ளது.

கடந்த 2021ல், 919.45; 2022 ல், 849.85 மி.மீ.,க்கு ஆண்டு சராசரியை விட கூடுதல் மழை பெய்தது. 2023ல், 553.73 மி.மீ., மழை பெய்தது;இது ஆண்டு சராசரியைவிட, 64.47 மி.மீ., குறைவு.

கடந்த 2024ல், மொத்த மழை அளவு, சராசரியைவிட 213.01 மி.மீ., அதிகமாக, 831.21 மி.மீ., பெய்தது. குளிர்காலத்தில், 41.25 மி.மீ., - கோடையில் 149.66; தென்மேற்கு பருவ காலத்தில், 210.60; வடகிழக்கு பருவத்தில், 429.61 மி.மீ., க்கு மழை பெய்தது.

நடப்பாண்டு குளிர் காலத்தில், இயல்பைவிட 2.49 மி.மீ., அதிகமாக, 16.49 மி.மீ., மழை பெய்தது. கோடையில் வெயில் கடுமையாக வாட்டிய போதும், மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து குளிர்வித்தது.

கோடையில் நேற்று வரை, 150.3 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது; கோடை மழை மாவட்டத்தில் இயல்பைவிட, 15.2 மி.மீ., அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோடை பருவம்முடிவடைய, இன்று உட்பட ஆறு நாட்கள் உள்ளன.

கோடை மழை, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் சரியாமல் பாதுகாத்துள்ளது. பாசனம், குடிநீருக்கும் பெரிய அளவில் தண்ணீர்தட்டுப்பாடு ஏற்படவில்லை. கால்நடைகளுக்கு, மேய்ச்சல் நிலங் களில் புல், செடி - கொடிகள் போதுமான அளவு கிடைத்ததால், தீவன தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

தென்மேற்கு பருவமும் கைகொடுத்தால், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, மாவட்டம் பசுமை மாவட்டமாகவே தொடரும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மழையால்

என்ன நன்மை?

l கிணறு, ஆழ்துளைக் கிணறு களில் சரியாத நீர்மட்டம்.

l குடிநீர் தட்டுப்பாடு இல்லை.

l தீவனப் பற்றாக்குறை இல்லை. கால்நடை மேய்ச்சலுக்கு எளிது.

l செறிவூட்டப்பட்ட நிலத்தடி நீர்மட்டம்.

திருப்பூரில் காலை முதல் மதியம் வரை, லேசான மழை பெய்து கொண்டே இருந்ததால், ரோட்டோர வியாபாரிகள் கவலை அடைந்தனர். பெரிய பாலிதீன் சாக்கால் கடைகளை மூடி வைத்து சோகமாக காத்திருந்தனர். நேற்று முன்தினம் இருந்தே மழை பெய்து வந்ததால், ஞாயிறு மட்டும் ரோட்டோர கடை அமைக்கும் பனியன் வியாபாரிகள், நேற்று கடை திறக்கவே இல்லை.

நேற்று மதியத்துக்கு பிறகு, மழை இல்லாமல் இயல்பான நிலை காணப்பட்டது. அதன் பிறகே, ரோட்டோர வியாபாரிகள் நேற்று கடைகளை திறந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் 2ம் தேதி திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான 'ஸ்கூல் பேக்' மற்றும் 'லஞ்ச் பேக்', பெல்ட், காலணிகள், ஷாக்ஸ், பள்ளி சீருடைகள் விற்பனை, நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை அதிகம் நடக்கும்; இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால், நேற்றே பள்ளி மாணவருக்கான 'பர்ச்சேஸ்' முடிக்க, பெற்றோர் தயாராக இருந்தனர்.

இருப்பினும், காலை, மழைபெய்து கொண்டே இருந்ததால் கவலையுடன் இருந்தவர்கள், மதியத்துக்கு பிறகு கடைகளுக்கு வந்தனர். மாலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்பதால், மதிய நேரத்திலும், ஜவுளிக்கடை, பேன்சி கடைகள், ஸ்டேஷனரி கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

நேற்று முன்தினம், மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 5.77 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக பல்லடத்தில், 15 மி.மீ., - குண்டடத்தில், 11; உடுமலையில் 10 மி.மீ., மழை பெய்தது. திருமூர்த்தி அணைப்பகுதியில் 9, வெள்ளகோவிலில் 8.40, காங்கயத்தில் 8.20, அவிநாசியில் 8, உப்பாறு அணையில் 8, கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 7 மி.மீ., - திருப்பூர் வடக்கு தாலுகாவில் 6, வட்டமலைக்கரை ஓடையில் 4.80, திருப்பூர் தெற்கு தாலுகாவில் 2, கலெக்டர் அலுவலக சுற்றுப்பகுதிகளில் 2 மி.மீ.,க்கு லேசான மழை பெய்துள்ளது.

திருப்பூர் நகர பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. காலை, 7:30 மணிக்கு துவங்கி, அரை மணி நேரத்துக்கு லேசான துாறல் மழை பெய்து நின்றது. மீண்டும் மதியம் ஒருமணியளவில் துாறல் மழை பெய்தது.

சிறிது நேரம் பெய்வது, ஓய்வது, மீண்டும் பெய்வது என, துாறல் மழை தொடர்ந்ததால், நாள் முழுவதும் குளிர்ந்தே சீதோஷ்ண நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us