ADDED : ஆக 29, 2025 09:38 PM
உடுமலை; வேலை உறுதி திட்டத்துக்கு, ஒன்றிய நிர்வாகங்களில், தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கம் சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் பொன்னையாவிடம் வழங்கிய மனு:
தமிழகத்திலுள்ள பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாக பிரித்து, வேலைப்பளுவை குறைத்து, பதவி உயர்வு வழங்க வேண்டும்.
7வது ஊதியக்குழுவில், தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஊதியத்துக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊதியத்துக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
வேலை உறுதி திட்டத்துக்கு ஒன்றிய நிர்வாகங்களில், தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் 'ஜல் ஜீவன்'; தமிழக அரசின், 'கனவு இல்லம்' திட்டங்களுக்கு தனிப்பிரிவு உருவாக்கி பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
