/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர் சத்தை இழக்கும் மண் உயிரி உரமிட ஆலோசனை
/
உயிர் சத்தை இழக்கும் மண் உயிரி உரமிட ஆலோசனை
ADDED : நவ 19, 2024 06:31 AM
திருப்பூர்; தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:
நவீன விவசாய முறையில் உற்பத்தியை பெருக்க, பெருமளவில் உரம் பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதால், மண்ணிற்கு கால்நடைகளின் சாணத்தை பயன்படுத்தி இடும் தொழு உரமும் குறைந்துவிட்டது.
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியும் குறைந்து, மண்ணின் அங்கக சத்து குறைந்துவிட்டது. இதனால் மண்ணில் உள்ள உயிரிகளின் எண்ணிக்கை குறைந்து, மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் உயிர் சத்து அதிகரிக்க, வேளாண் துறை உயிரி உரங்களை தயாரித்து வழங்கி வருகிறது.
மண்ணில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஸ் உள்ளிட் டவை இயற்கையாகவே கலந்திருக்கும். மண்ணில் உள்ள அங்கக சத்து அளவுக்கு ஏற்ப, இவற்றின் எண்ணிக்கை இருக்கும்.
இந்த உயிரி உரங்கள், வேளாண் துறை ஆய்வகங்களில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிரிகள், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, மண்ணில் நிலைநிறுத்துகிறது.
பாஸ்போ பாக்டீரியா உயிரிகள், கரையாத நிலைக்கு மாற்றித்தருகிறது. பொட்டாஸ் நகர்வு பாக்டீரியா, வேர் பகுதிக்கு உரம் கிடைக்க உதவுகிறது. உயிரி உரங்கள் மண் வளத்தை மேம்படுத்துவதால், ரசாயன உரங்களின் தேவை குறையும்; பயிர் விளைச்சல் மற்றும் தரம் அதிகரிக்கும்.
சொட்டுநீர் பாசன வசதியுள்ள விவசாயிகள், உயிரி உரங்களை சொட்டு நீர் பாசனத்தின் வழியாக, பயிர்களுக்கு செலுத்தலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.