ADDED : பிப் 10, 2025 10:36 PM

உடுமலை; கோடந்துார் மலைவாழ் பகுதியில், கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், வான் நோக்கு நிகழ்ச்சி நடந்தது.
வானில் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், கோள்களின் அணிவகுப்பை பல பகுதிகளிலும் பொதுமக்கள் கண்டுவருகின்றனர். உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், பொதுமக்கள் காண்பதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடந்துார் மலைவாழ் பகுதியில் வான் நோக்கு நிகழ்ச்சி நடந்தது. உடுமலை சுற்றுச்சூழல் சங்கமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். வனவர் நிமல் முன்னிலை வகித்தார். கோடந்துார் மலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களும், தொலைநோக்கி வழியாக கோள்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து மாணவர்களுடன் அறிவியல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை சுற்றுச்சூழல் சங்க நிர்வாகிகள், ஆண்டாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
