/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2026ல் அ.தி.மு.க., ஆட்சி: ஜெயராமன் பேச்சு
/
2026ல் அ.தி.மு.க., ஆட்சி: ஜெயராமன் பேச்சு
ADDED : மே 05, 2025 05:37 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மேதினவிழா பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதியில் நேற்று நடந்தது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கண்ணப்பன் துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ., விஜயகுமார், தோட்ட தொழிலாளர் பிரிவு செயலாளர் ஜெயசீலன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
தமிழக முதல்வர், 'நம்பர் 1 மாடல் அரசு' என்று கூறியது எதற்காக என்று மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதிக மமதையால் தி.மு.க., அரசு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. பொய்யான வாக்குறுதியை கூறி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடிப்பது அவர்களுக்கு கைவந்த கலை.
அதன்படி, 525 தேர்தல் வாக்குறுதியை கூறி, மக்களை ஏமாற்றி, தி.மு.க., ஆட்சியை பிடித்தது; ஆனால், இதுவரை, பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அமைச்சரவையில் இருந்த இருவர், தற்போது வெளியேறிவிட்டனர். அடுத்த சில மாதங்களில், மேலும் அமைச்சர்கள் வெளியேறுவர்.
தமிழகத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு, இந்தியாவிலேயே, முதல் மாநிலம் என்று முதல்வர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
கூட்டணி பலத்துடன், 2026 ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பெண்களுக்கு சேலைகள் உட்பட நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் முத்து, ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

