/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர்
/
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர்
ADDED : ஜூன் 28, 2025 11:57 PM
நீர் ஆதாரம் இல்லாமல் வறண்டு காணப்படும் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு, அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை துளிர் விடத்துவங்கியுள்ளது.
காங்கயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் வட்டமலைக்கரை ஓடையில் அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டில்இந்த அணை, ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவில், அணையில், 26 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கும் வகையில் திட்டமிட்டு கட்டப்பட்டது. இதில், 0.53 டி.எம்.சி., அளவு நீர் இருப்பு வைத்து, சுற்றுப்பகுதி விவசாய நிலங்களுக்கு, பாசனத்துக்கு நீர் வழங்கும் வகையில் இங்கு அணை கட்டப்பட்டது.
6,500 ஏக்கர் விளைநிலம்பயனடைய வாய்க்கால்கள்
இதன் வாயிலாக, 6,500 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று பயனடையும் வகையில் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டது. பி.ஏ.பி., பாசன கால்வாய் கசிவு நீர் மற்றும் பல்லடம், பொங்கலுார், அனுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் மழையால், 350 சதுர மைல் பரப்பு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து பெறப்படும் நீர், வட்டமலைக்கரை ஓடையில் வரும் தண்ணீர் ஆகியன இதில் தேக்கி வைத்து, அதனை பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையிலும் இதன் பயன்பாடு திட்டமிட்டு அணை கட்டப்பட்டது.
பி.ஏ.பி., திட்ட கால்வாயில், கள்ளிப்பாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி கடந்த 2021ல், பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு அணை நிரம்பியது. கடந்த ஜன., 9ம் தேதி மீண்டும் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், ஊராட்சி ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.
கடலுக்கு சென்ற 20 டி.எம்.சி., நீர்
கடந்த ஐந்தாண்டில், அமராவதியிலிருந்து, 20 டி.எம்.சி., அளவு தண்ணீர் கடலுக்குச் சென்றிருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவே, 53 டி.எம்.சி., தான்.இந்த அணையை அமராவதியுடன் இணைப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த, 2021ல், அரசு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன்படி அமராவதி ஆற்றிலிருந்து நிரந்தர தீர்வாக தண்ணீர் கொண்டு வருவது குறித்து, திட்டக்குழு அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோர், கடந்த 2023ல் ஆய்வு நடத்தினர். நீர் வழிப்பாதை நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
அமராவதி ஆறு அக்கரப்பாளையத்திலிருந்து ஆண்டிபாளையம், பசுபதிபாளையம், ஊஞ்சவலசு வழியே அணையின் பின் பகுதிக்கு தண்ணீர் சேர்ப்பது, அமராவதி ஆறு அணைப்பாளையத்தில் இருந்து வெள்ளியம்பாளையம், செட்டிபாளையம் வழியாக அணைக்கு தண்ணீர் கொண்டு வருவது, கம்பளியம்பட்டியில் இருந்து 4.2 கி.மீ., கடந்து அணைக்கு தண்ணீர் கொண்டு சேர்ப்பது என நீர் வழிப்பாதை ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கான திட்ட மதிப்பீடு, செலவுகள், தேவைப்படும் மின் அளவு, மோட்டார் திறன், பணி முடிக்க ஆகும் காலம் ஆகியன குறித்தும் இந்த ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, 150 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.