/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முகத்தை துணியால் இறுக்கி மூதாட்டி கொடூர கொலை
/
முகத்தை துணியால் இறுக்கி மூதாட்டி கொடூர கொலை
ADDED : அக் 19, 2024 09:22 PM

பல்லடம்,:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையைச் சேர்ந்த சுப்பையன் மனைவி கண்ணம்மாள், 70. இவரது மகன், மகள் திருமணமாகி தனியே வசிக்கின்றனர். சுப்பையன் காலமான நிலையில், கண்ணம்மாள் சொந்த வீட்டில் தனியாக வசித்தார்.
நேற்று காலை, நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் புகாரின்படி, பல்லடம் போலீசார் பார்த்தபோது, கண்ணம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீசார் கூறியதாவது:
இரவு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள், மூதாட்டி கை - கால்களை கட்டியதுடன், சத்தம் போடாமல் இருக்க, கண்ணம்மாளின் முகத்தையும் துணியால் இறுக்கி கட்டியுள்ளனர். மூச்சுத்திணறி கண்ணம்மாள் இறந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து, திட்டமிட்டே வந்துள்ளனர். அவர் அணிந்திருந்த தங்க செயின், வளையல் என, 8 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. கம்மல், மோதிரம் ஆகியவற்றை எடுக்கவில்லை.
பீரோக்கள் உடைக்கப்படாமல், அதிலிருந்த பொருட்கள் மட்டும் கலைந்துள்ளன. பீரோவை சுற்றி மிளகாய் பொடி துாவப்பட்டிருந்தது. மர்ம ஆசாமிகள், நகை, பணம் திருடுவதற்காக வந்தனரா அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட ஏதேனும் மதிப்புமிக்க பொருளை குறிவைத்து வந்தனரா என, விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.
தேசிய நெடுஞ்சாலை, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என, ஆள் நடமாட்டம், போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் நடந்த கொலை சம்பவம், காரணம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா நேரில் விசாரித்தார். பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.