/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை பறிக்க முயன்றவரை போராடி பிடித்த மூதாட்டி
/
நகை பறிக்க முயன்றவரை போராடி பிடித்த மூதாட்டி
ADDED : பிப் 03, 2024 11:50 PM
திருப்பூர்;அவிநாசி அருகே, தள்ளுவண்டி கடை பெண்ணிடம், கவரிங் செயினைப் பறிக்க முயன்ற வாலிபரை அப்பெண் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.அவிநாசி, வஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள், 62. அவிநாசி - வஞ்சிப்பாளையம் ரோட்டில் தள்ளுவண்டி கடையில் கூழ் வியாபாரம் செய்கிறார்.
நேற்று பிற்பகல் அவர் கடைக்கு ஒரு பைக்கில் வந்த வாலிபர் கூழ் அருந்தி விட்டு, எதிர்பாராதவிதமாக கண்ணம்மாள் கழுத்திலிருந்த செயினைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். சுதாரித்துக் கொண்ட கண்ணம்மா அந்நபரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சப்தம் போட்டார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரைப் பிடித்து செயினை மீட்டனர்.
திருமுருகன்பூண்டி போலீசார் அந்நபரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர், அனுப்பர்பாளையம், திருநகர் காலனியைச் சேர்ந்த அகிலன், 28 என்று தெரிந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
கண்ணம்மாள் அணிந்திருந்தது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கவரிங் செயின் எனத் தெரிந்தது. இருப்பினும், அவர் தைரியமாகப் போராடி செயின் பறிக்க முயன்ற நபரை பிடித்து, போலீசில் ஒப்படைத்த செயல் பாராட்டைப் பெற்றது.