/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டுவதை தடுக்க முயற்சி : குண்டுக்கட்டாக பொதுமக்கள் கைது.. திருப்பூர் அருகே பரபரப்பு
/
குப்பை கொட்டுவதை தடுக்க முயற்சி : குண்டுக்கட்டாக பொதுமக்கள் கைது.. திருப்பூர் அருகே பரபரப்பு
குப்பை கொட்டுவதை தடுக்க முயற்சி : குண்டுக்கட்டாக பொதுமக்கள் கைது.. திருப்பூர் அருகே பரபரப்பு
குப்பை கொட்டுவதை தடுக்க முயற்சி : குண்டுக்கட்டாக பொதுமக்கள் கைது.. திருப்பூர் அருகே பரபரப்பு
ADDED : அக் 25, 2025 01:43 AM

பல்லடம்: பல்லடம் அருகே, இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னக்காளிபாளையம் கிராமம். இங்குள்ள திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, 9 ஏக்கர் நிலத்தில், மாநகரில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நேற்று துவங்கின. தகவல் அறிந்த இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூர் மார்க்கெட்டிற்கு அதிகப்படியான விளைபொருட்கள் இங்கிருந்துதான் செல்கின்றன. விவசாயம் நிறைந்த இப்பகுதியை மாநகராட்சி அழிக்க நினைக்கிறது. நாங்கள் அரசுக்கோ, மாநகராட்சிக்கோ எதிரானவர்கள் அல்ல.
ஊரைக் காப்பாற்ற எங்கள் உயிரையும் தர தயாராக உள்ளோம். எக்காரணம் கொண்டும் பணிகள் மேற்கொள்ள விடமாட்டோம். கோர்ட் மூலம் நிச்சயம் தடை உத்தரவு பெறுவோம். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், ''கோர்ட் உத்தரவு பெற்று, விதிமுறைகளை பின்பற்றி தான் ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்கிறோம். உங்களுக்கு ஆட்சேபம் என்றால் கோர்ட்டை நாடுங்கள். பணிகளை தடுத்து நிறுத்த முடியாது'' என திட்டவட்டமாக கூறினர். மக்கள் எதிர்ப்பை மீறி பணிகள் துவங்கின. அங்கிருந்த மரங்களும் வெட்டப்பட்டன. இதை எதிர்த்த பொதுமக்கள், 'ஒரு மரத்தை வெட்டினால் 20 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது'' என்றனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி, மரங்கள் வெட்டப்பட்டன. பணிகளை தடுக்க முயன்ற, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.

