ADDED : ஜூலை 22, 2025 12:12 AM

திருப்பூர்; பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரும் கழிவுகளை கொட்டி, தீ வைப்பதால், நொய்யல் ஆறு மாசுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரையோரம், அணைப்பாளையம் வரையில், புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டோரமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரும் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, பனியன் வேஸ்ட் துணிகள், பிரின்டிங் போம் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையும் கொட்டப்படுகிறது. அவ்வப்போது, தீ வைத்து எரிப்பதால், அப்பகுதி புகை மண்டலமாக காணப்படுகிறது.
கழிவுகளை கொட்டுவதால், நொய்யல் ஆறு மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே, நொய்யல் கரையோர ரோட்டில் குப்பை கொட்டுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.