ADDED : மே 27, 2025 10:45 PM

அவிநாசி : அவிநாசி, கருமாபாளையம் கிராமத்தை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 மாணவர்கள் தத்தெடுத்துள்ள நிலையில், மழைக்கால பாதிப்புகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில், வீடு, வீடாக சென்று என்.எஸ்.எஸ்., மாணவர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
'மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்; இதுதொடர்பான அறிகுறி தென்பட்டால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நோய் தொற்று பரவவும் வாய்ப்புண்டு. மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பும் உள்ளது. எனவே, தேங்காய் சிரட்டை, தொட்டி, உள்ளிட்டவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின் சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.