ADDED : மார் 11, 2024 01:45 AM

பல்லடம்:பல்லடம், அங்காளம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், 'தாயே... அங்காளம்மா' கோஷம் முழங்க, பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கினர்.
பல்லடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவில் உள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான இக்கோவிலில், மூலவராக அங்காளம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், 49வது ஆண்டு குண்டம் திருவிழா நடந்தது.
முன்னதாக, 7ம் தேதியன்று விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இரவு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. நேற்று காலை 7:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
அர்ச்சகர்கள், பூசாரிகள் முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 'ஓம் சக்தி, பராசக்தி'; 'தாயே... அங்காளம்மா' கோஷம் முழங்க சிறுவர், சிறுமியர், இளம்பெண்கள், இளைஞர்கள், தாய்மார்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள்என அனைவரும் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

