/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!
/
'கடிவாளம்' போட்ட உயிரியல்; 'வாழ' வைத்த வரலாறு!
ADDED : மார் 18, 2025 04:36 AM

திருப்பூர், : 'உயிரியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினா கடினமாக இருந்தது; பாடங்களுக்குள் இருந்து இதுவரை கேட்கப்படாத கேள்விகள் கேட்டிருந்ததால், விடையளிக்க அதிகம் யோசிக்க வேண்டியிருந்தது,' என, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
பிளஸ் 1 வரலாறு, உயிரியியல் உட்பட ஏழு தேர்வுகள் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உயிரியல் தேர்வுக்கு, 6,550 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது; 60 பேர் பங்கேற்கவில்லை. 6,490 பேர் தேர்வெழுதினர். வரலாறு தேர்வை, 2,466 பேருக்கு, 2,341 பேர் எழுதினர்; 125 பேர் தேர்வறைக்கு வரவில்லை.
தாவரவியல் தேர்வை, 387 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியில் தேர்வை, 895 பேர் எழுதினர். அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தேர்வை, 98 பேரும், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பதவி கோட்பாடு தேர்வை, 29 பேரும் எழுதினர். தனித்தேர்வர் மற்றும் அரியர் தேர்வர்கள் என, 222 பேர் வரலாறு தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்; 53 பேர் பங்கேற்வில்லை. 169 பேர் தேர்வெழுதினர்.
உயிரியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
தங்க அர்ச்சனா: உயிரியல் தேர்வில், பதினைந்து ஒரு மதிப்பெண்ணில், பத்து மட்டுமே தெரிந்ததாக இருந்தது. ஐந்து வினாக்கள் எழுதவே முடியவில்லை. மற்ற பகுதியில் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் கேட்டகேள்விகள் வந்திருந்ததால், விடையளிக்க முடிந்தது. தாவர வியல், விலங்கியல் இரண்டு பகுதி கட்டாய வினாவும் பரவாயில்லை.
ராமன்: எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை. ஒரு மதிப்பெண் கடினமாக இருந்தது. பாடங்களுக்குள் இருந்து இதுவரை கேட்கப்படாத கேள்விகள் கேட்டிருந்ததால், விடையளிக்க அதிகம் யோசிக்க வேண்டியிருந்தது. மூன்று, ஐந்து மதிப்பெண் கட்டாய வினாக்கள் பரவாயில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் மீண் டும் கேட்கப்பட்டிருந்தது.
'சென்டம்' கஷ்டம்
பல்லடம், வி.கள்ளிப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, உயிரியல் ஆசிரியர் கோமதி கூறுகையில், ''15 ஒரு மதிப்பெண்ணில், பத்து பாடங்களுக்கு பின்புறம் உள்ளது. ஐந்து, பாடத்துக்குள் இருந்து, யோசித்து விடை காணும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. நன்றாக படிக்கும் மாணவ, மாணவியரின் திறமையை பரிசோதிக்கும் வகையில் ஒரு மதிப்பெண் கேட்கப்பட்டுள்ளது. மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண், கட்டாய வினாக்கள் எளிமை என்பதால், நிச்சயம் நல்ல மதிப்பெண்களை வாங்குவர். தேர்ச்சி சதவீதம் பாதிக்காது; ஆனால், சென்டம் பெறுவது கடினம்,' என்றார்.
வரலாறு தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:
காவ்யாஸ்ரீ: ஒரு மதிப்பெண் ணில் அனைத்தும் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் வந்திருந்தது. மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தது. வினாத்தாளில் அனைத்து பகுதிகளுமே எளிமை என்பதால், வரலாறு தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியும்.
தேர்ச்சி அதிகரிக்கும்
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விமல்பிரகாஷ் கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளாக இல்லாத வகையில், வினாத்தாள் எளிமையாக இருந்தது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி. இதனால், வரலாறு பாடத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். கட்டாய வினா உட்பட அனைத்து பகுதியிலும் மாணவர் பயிற்சி பெற்ற வினாக்களும் இடம் பெற்றிருந்தது,'' என்றார்.
பிளஸ் 1 மாணவருக்கு, வரும், 20ம் தேதி இயற்பியல், பொரு ளியல் தேர்வும், 24ம் தேதி, கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வும் நடக்கிறது. வரும், 27ம் தேதி, வேதியியல், புவியியல், கணக்கு பதிவியலுடன் பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது.