/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் புறவழிச்சாலை இரு திட்டங்களும் ஆய்வு
/
பல்லடம் புறவழிச்சாலை இரு திட்டங்களும் ஆய்வு
ADDED : ஆக 25, 2025 10:13 PM
பல்லடம்; பல்லடம் புறவழிச்சாலை திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பழைய மற்றும் புதிய திட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை கண்டறியும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கடந்த, 2018ல், கோவை - -திருச்சி ரோடு காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூர் வரை, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக, திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, பல்லடம் அடுத்த, பெரும்பாளி அருகே துவங்கி, மாதப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன் வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்லடம் பகுதி மக்கள், 2018ம் ஆண்டு திட்டமிடப்பட்ட பழைய புறவழிச் சாலை திட்ட த்தை செயல்படுத்த வலியுறுத்தினர்.
இதேபோல், மற்றொரு தரப்பினர், 2018ம் ஆண்டு திட்டமிடப்பட்ட பழைய புறவழிச் சாலை திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு சார்பிலும், திருப்பூர் மாவட்ட நிர் வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் அளவீடு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், 'இரு திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்துள்ளதால், திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த ஆலோசனை நடந்து வருகிறது.
இரு திட்டங்களுக்கான துாரம், பாதிக்கப்படும் விளைநிலங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்த ஆகும் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு, இரு திட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆணையம் பரிந்துரை செய்யும் திட்டம் எதுவோ அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.