ADDED : ஜூலை 08, 2025 12:36 AM

பல்லடம்; பல்லடத்தில், பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல், வெளியேயே நின்று செல்வதால், பயணிகள், பொதுமக்களும், பஸ் ஸ்டாண்டை தவிர்த்து, ரோட்டுக்கு வருகின்றனர்.
அதிகளவிலான கனரக வாகனங்கள், சரக்கு போக்குவரத்து என, வாகன நெரிசல் மிகுந்த பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், பயணிகள், பொதுமக்கள் இவ்வாறு பஸ்சுக்காக காத்திருப்பது, விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், பஸ்கள் ரோட்டிலேயே நிற்பதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பொதுமக்களை நம்பி, ஆயிரக்கணக்கில் வாடகை செலுத்தி, பஸ் ஸ்டாண்டில் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில மாதம் முன், அனைத்து பஸ்களும் கட்டாயம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல வேண்டும் என நகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், பெரும்பாலான பஸ்கள் பின்பற்றுவதில்லை. விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டும், வியாபாரிகள் பாதிக்காமல் இருக்கவும், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல வேண்டியது அவசியம். எனவே, போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து, இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
