ADDED : ஏப் 11, 2026 05:48 AM

திருப்பூர்: ''வேட்பாளர் செய்யும் அனைத்து செலவுகளும் நிழல் போல் தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்று வேட்பாளர் தேர்தல் செலவின ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று டவுன்ஹால் அரங்கில் நேற்று நடந்தது. தேர்தல் செலவின பார்வையாளர் சுனில் ரேண்டோ தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமித் (தெற்கு) சரவணன் (பல்லடம்), உதவித் தேர்தல் நடத்தம் அலுவலர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட கருத்துகள்:
வேட்பாளர்களின் தேர்தல் செலவு தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள உச்சபட்ச தொகைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல் செலவுகள் மேற்கொள்ள பிரத்யேக வங்கி கணக்கு துவங்க வேண்டும். அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக செலவிடப்பட வேண்டும். அதற்கு மேற்பட்ட அனைத்து தொகைகளும் உரிய பில்களுடன், வங்கி கணக்கு வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட கால அவகாசத்தில் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ள விலைப்பட்டியல் படி செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
வாகன அனுமதி பெற்று பிரசாரம் செய்யும் போது, உடன் செல்லும் பிற வாகனங்களும் செலவு கணக்கில் எடுக்கப்படும். வேட்பாளர்களைப் பொறுத்தவரை செலவுகளை குறைத்துக் காட்டவே எண்ணுவீர்கள்; செலவின கண்காணிப்பு குழுவினர் அதிகமாகத் தான் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த இடத்திலும் நிர்ணயித்த தொகையை விடக் குறைவாக காட்டி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
வேட்பாளர் செய்யும் அனைத்து செலவுகளையும் இந்த குழுவினர் 'ேஷடோவாட்ச்' என்ற வகையில் நிழல் போல் கண்காணிப்பர். எனவே தவறான கணக்கு காட்டி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். செலவினங்களில் தவறான கணக்கு காட்டினால் வேட்பாளர் தகுதி இழப்பு நடவடிக்கை வரை செல்லும் நிலை ஏற்படலாம்.
