UPDATED : செப் 17, 2026 09:55 PM
ADDED : செப் 17, 2026 09:02 PM
பொங்கலுார்:நாச்சிபாளையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான வீட்டுமனைப் பிரிவுகள் உருவாகியுள்ளன. பல இடங்களில் முறையான சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததால், சமீபத்தில் பெய்த மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், பலர் சாலையோரம் மற்றும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். தற்போது மழை பெய்துள்ளதால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பை தேங்கியுள்ள பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் சிலர், துர்நாற்றம் மற்றும் சுகாதார பாதிப்பு காரணமாக வீடுகளை காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, நாச்சிபாளையம் பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், மழைநீர் தேங்காத வகையில் சாலை மற்றும் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குப்பை பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு, நோய் பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
