ADDED : மார் 08, 2024 01:52 AM
திருப்பூர்;நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் கலா. அவருக்கு பரமத்தி வேலுாரைச் சேர்ந்த சுதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர் ஜெகதீஸ் என்பவரை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், பழநி அருகே இடம் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக கூறி, அதைப் பார்க்க சுதாவை அழைத்துச் சென்றார். அவருடன் கலா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒரு காரில் சென்றனர். பழநியை நோக்கி காங்கயம் அருகே சென்ற போது, மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை மறித்து மிரட்டி காருடன் கடத்திச் சென்றது. அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மற்றும் எட்டு பவுன் தங்க நகைளைப் பறித்து விட்டு, கொடுவாய் அருகே ஓரிடத்தில் விட்டுச் சென்றனர்.
காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து சுதா, இந்திராணி, கார்த்திகேயன், 35, சந்தோஷ், 34, பாண்டிதுரை, 39, செந்தில், 50, செந்தில்குமார், 40 ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இதில், தொடர்புடைய, தாராபுரம் ரைஸ்மில் தோட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், 39, நேற்று கைது செய்யப்பட்டார்.
