
திருப்பூர்; இன்றுதான் தீபாவளி; ஆனால், திருப்பூரில் நேற்று முதலே, இல்லங்களில், பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டத் துவங்கின.
தீபாவளியையொட்டி திருப்பூரில் கடை வீதிகள் மக்கள் தலைகளாகத் தென்பட்டன. பிரதான சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டியிருந்தது.
பின்னலாடை தொழிலாளர்களுக்கு, 19 மற்றும் 26ம் தேதிகளில், போனஸ் பட்டுவாடா நடந்தது. புத்தாடை எடுக்கவும், பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்கவும், கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது. நேற்று காலை முதலே களைகட்டியது.
கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு தீபாவளி விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காதர்பேட்டை பகுதிகளில், மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம், பரபரப்பாக நடந்தது. சில்லறை விற்பனையில், சட்டை, 'டி-சர்ட்' இரவு நேர ஆடைகள், குழந்தைகள் ஆடைகள் விற்பனை, சிறப்பு தள்ளுபடியுடன் நேற்று நடந்தது.
திருப்பூர் குமரன் ரோடு, மாநகராட்சி ரோடு, புது மார்க்கெட் வீதி பகுதிகளில், மக்கள் நடமாட முடியாத அளவுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டது. குமரன் ரோட்டில், காலை, 11:00 மணி துவங்கி,இரவு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. போலீசார், தொடர்ந்து கண்காணித்து, ஒழுங்குபடுத்தி வந்தனர்.
நேற்று முதலே பெரும்பாலான இல்லங்களில், தீபாவளிப் பண்டிகை களைகட்டியது. அதிர்வேட்டு சத்தத்துடனும், வண்ண மத்தாப்புகளை சுழற்றியும், வாண வேடிக்கையோடும் கொண்டாட்டத்தைத் துவக்கினர்.
சொந்த ஊர் பயணம்
திருப்பூர் மக்கள்தொகையில், 70 சதவீதம் அளவுக்கு இருப்பது புலம்பெயர்ந்த மாவட்ட மக்கள், தொழில் நிமித்தமாக வந்தவர்கள்; இவர்கள் தற்போது திருப்பூர் வாசிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், சொந்த மண்ணில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல தவறுவதில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகள் முன்பு வரை, கடைசி நேரம் வரை திருப்பூரில் காத்திருந்து, முந்தைய நாள் புறப்பட்டு செல்வர். பஸ் ஸ்டாண்ட்களில், கூட்டத்தை கட்டுப்படுத்தவே, நுாற்றுக்கணக்கான போலீசார் தேவைப்பட்டனர்.
குழந்தைகளுடன் செல்ல வேண்டியிருப்பதால், கடைசி நேர சிரமத்தை தவிர்க்க, மூன்று நாட்கள் முன்னதாகவே, சொந்த ஊர் செல்வது அதிகரித்துள்ளது.
குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு, தாங்கள் மட்டும் பண்டிகைக்கு முந்தைய நாள், குடும்ப ஆண்கள் செல்ல திட்டமிடுகின்றனர். சில குடும்பத்தினர் கூட்டாக சேர்ந்து, 'டூரிஸ்ட்' வாகனத்தை புக் செய்து, லக்கேஜ்கள், குட்டீஸூடன் உற்சாகமாக புறப்படுகின்றனர். பின்னலாடை நிறுவனங்கள், கடந்த 28ம் தேதி முதல் விடுமுறை அளித்துள்ளன; வரும் 4ம் தேதி தான் மீண்டும் திறக்கப்படும்.
தீபாவளி கொண்டாட செல்லும் மக்கள், 3ம் தேதியே திருப்பூர் திரும்பி விடுவர் என்பதால், அதற்ககேற்ப வெளியூரில் இருந்து கூடுதல் பஸ்களை திருப்பூர் இயக்கவும், போக்குவரத்துத்துறையினர்திட்டமிட்டுள்ளனர்.

