/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
களைகட்டுகிறது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 21, 2025 06:04 AM

அன்பெனும் மழையில் அகிலம் நனைய, மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, மானிடராய் வாழ்ந்த ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் கிறிஸ்துமஸ், கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகை. டிச. 25ல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, டிச. மாதம் துவங்கிய உடனேயே கிறிஸ்தவர்கள் தயாராகி விடுவர்.
வீடுகளை வர்ணம் தீட்டி சுத்தம் செய்து வைப்பர். ஒவ்வொரு கிறிஸ்தவ தேவாலயங்கள் சார்பில், கிறிஸ்துமஸ் பூபாளக் குழுவினர், இரவின் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடு, வீடாக சென்று, கிறிஸ்துமஸ் பாடல் பாடி, வீடுகளில் உள்ளவர்களுக்கு பரிசுப்பொருள் கொடுத்தனர். இக்குழுவில் இடம் பெறும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர், உற்சாகமாக நடனமாடி, இனிப்பு கொடுத்து, கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறினர். தேவாலய குருக்கள், வீடுகள் மந்திரித்து, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாட்டுக்குடிலில் ஏசு பிறந்த போது, அவரை பார்க்க வந்த அரசர்களுக்கு, நட்சத்திரம் வழிகாட்டியதாக, பைபிள் கூறுகிறது. அந்த வகையில் வீடுகளின் முகப்பில் நட்சத்திரங்கள் கட்டி, ஒளி பரப்புவர். கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் வைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தேவாலயங்கள் அனைத்தும் வர்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும்; கிறிஸ்து பிறப்பின் சூழலை தத்ரூபமாக வெளிப்படுத்தும் குடில் அலங்காரங்களும் செய்து வைத்துள்ளனர்.
டிச. 24ம் தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலிக்கு தேவாலயங்கள் தயாராகி வருகின்றன.திருப்பூரில் உள்ள பல கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கார பொருட்கள், ஸ்டார் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள தேவாலயங்கள் வர்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

