/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
/
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு; எந்த இடம் பெற போகிறது திருப்பூர்?
ADDED : மே 14, 2025 11:55 PM

திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. கடந்த முறை, 21வது இடம் பெற்ற திருப்பூர் இம்முறை எந்த இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல், 15ம் தேதி வரை நடந்தது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில், 29 ஆயிரத்து, 887 மாணவர்கள் தேர்வெழுதினர்.
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. நாளை (16ம் தேதி) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிறது.
கடந்த, 2019ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்பூர் முதலிடம் பெற்றது. கொரோனா காரணமாக, 2020 மற்றும், 2021ல் தேர்வு நடக்கவில்லை; அனைவரும் பத்தாம் வகுப்பில் 'ஆல்பாஸ்' செய்யப்பட்டனர். 2019ல் முதலிடத்தில் இருந்த திருப்பூர், 2022 ல், 29வது இடம் பெற்று பெரும் சறுக்கலை சந்தித்தது; ஆனால், 2023ல், 93.93 சதவீதத்துடன், 18 இடங்கள் முன்னேறி, 11வது இடம் பெற்றது.
கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 11வது இடத்தில் இருந்து பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடத்துக்கு தள்ளப்பட்டது; தேர்ச்சி சதவீதம், 92.38. நடப்பாண்டு, மொத்தம், 29 ஆயிரத்து, 887 பேர் தேர்வெழுதியுள்ளனர். முந்தைய ஆண்டை விட, 293 பேர் அதிகம். நாளை வெளியாகும் தேர்வு முடிவில், திருப்பூர் எத்தனையாவது இடம் பெற போகிறது என்பது தெரிய வரும்.
நம்பிக்கை உள்ளது
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறுகையில், ''கல்வியாண்டு துவக்கத்தில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி, பாடங்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு தொடர் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு நான்கு மாதம் முன்பிருந்தே மாணவ, மாணவியரை பாட ஆசிரியர்கள் தயார் படுத்தியுள்ளனர். கடந்த முறை பெற்ற தேர்ச்சியை விட, நடப்பாண்டு முன்னேற்றமான தேர்ச்சியை மாணவ, மாணவியர் பெற்றுத் தருவர்; நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
முதலிடம் கிடைக்குமா?
பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 5ல் துவங்கியது; 27ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 1 தேர்ச்சியில், 2022-ல் 11வது இடம் பெற்ற திருப்பூர், 2023 ல் பத்து இடங்கள் முன்னேறி, முதலிடம் பெற்றது. பிளஸ் 2, பிளஸ் 1 இரண்டிலும் முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற பாராட்டு பெற்றது. 2024-ல் மூன்றாமிடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டு எந்த இடம் என்பது நாளை (16ம் தேதி) மதியம் வெளியாகும் தேர்வு முடிவில் தெரியவரும்.