/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டர் உறுதி; பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் நிம்மதி
/
பட்டா பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டர் உறுதி; பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் நிம்மதி
பட்டா பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டர் உறுதி; பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் நிம்மதி
பட்டா பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டர் உறுதி; பட்டுக்கோட்டையார் நகர் மக்கள் நிம்மதி
ADDED : நவ 28, 2024 06:21 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் பகுதி மக்கள், தாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த சென்றனர். போலீசார் தடுத்ததால், தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதன்பின், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சேகர் உள்பட எட்டுபேர் பங்கேற்றனர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால், காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
குடியிருப்போர் நல சங்க தலைவர் சேகர் கூறியதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 192 குடும்பத்தினர், கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அருகாமையில் குடியிருந்து வரும் ஐந்து பேர், தாங்கள் விவசாயிகள் என அரசுக்கு தவறான தகவல் அளித்து, தலா 63 சென்ட் வீதம் பட்டா பெற்றுக்கொண்டனர். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், 1999ல், ஐந்து பேரின் பட்டாவை ரத்து செய்து, வீடுகட்டி குடியிருக்கும் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், அப்போதைய அதிகாரிகள், ஐந்து பேருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யாமலேயே, 72 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கி விட்டனர். ஐந்து பேரில் ஒருவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பட்டா வழங்க தடையாணை பெற்றார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், வழக்கு தொடர்ந்தவர்களிடம் பேச்சு நடத்தியதில், வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர்.
இருப்பினும், அதிகாரிகளின் அலட்சிய போக்கினால், பல ஆண்டுகளாகியும் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. தற்போது எங்களிடம் பேசிய கலெக்டர், அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் பண்டிகைக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இதனால், போராட்டத்தை கைவிடுகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.