கணினி அறிவியல் தேர்வு 'ஈஸி' மாணவ, மாணவியர் 'குஷி'
கணினி அறிவியல் தேர்வு 'ஈஸி' மாணவ, மாணவியர் 'குஷி'
ADDED : மார் 26, 2026 10:37 PM

திருப்பூர்: பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர் கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுதேர்வு கடந்த 2ம் தேதி துவங்கிய தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று, கணினி அறிவியல், சிறப்பு தமிழ், ஹோம் சயின்ஸ், நர்ஸிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடந்தது. அதில், கணினி அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
சத்யபிரியா: அனைத்து கேள்விகளும் எளிதாக பதில் அளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு, மூன்று, ஐந்து மார்க் என, ஒவ்வொரு பகுதியில் இடம்பெற்றிருந்த கேள்விகள் உட்பட, அனைத்தும் எளிது. அனைத்தும் புத்தகத்தில் இருந்தது மட்டுமே இடம்பெற்றிருந்தது. இம்முறை, இந்த பாடத்தில் எளிதாக 'சென்டம்' எடுக்கலாம்.
முகமது ஆசிக்: முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்தது. கட்டாய கேள்வி முதல் அனைத்தும் எளிது. அதில், புரோக்ராம் தொடர்பான கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க கஷ்டமாக இருந்தது. மற்றபடி, அனைவரும் நல்ல மதிப்பெண் எடுக்கும் வகையில் தான் இருந்தது.
நர்மதா: அனைத்தும் புத்தகத்தில் இருந்து மட்டுமே இடம் பெற்றிருந்தது. கடந்த தேர்வுகள், ஆசிரியர்களால் குறிப்பிடப்ட்ட முக்கியமான கேள்விகள் இடம் பெற்றிருந்தது. எதிர்பார்க்கப்பட்டவை நிறைய வந்திருந்தது. எளிதாக எழுத முடிந்தது. நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
பிரியா விடை பெற்ற
மாணவ, மாணவியர்
பிளஸ்2 பொது தேர்வு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் நேற்றுடன் அனைத்தும் நிறைவு பெற்றது. பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ, மாணவியர் ஒருவர் மீது, ஒருவர் 'இங்க்' தெளித்தனர். தொடர்ந்து வண்ண பொடிகளை பூசியும் மகிழ்ந்தனர். தங்களது வகுப்பறைகளில் அமர்ந்தும், ஆசிரியர்களை சந்தித்து பேசியும், போட்டோக்களை எடுத்து பிரியா விடை பெற்றனர்.
