/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விரிசலுக்கு குடிநீர் பராமரிப்பு பணி காரணமாம்? 'தினமலர்' செய்தியால் அதிகாரிகள் திடீர் 'அலர்ட்'
/
சாலை விரிசலுக்கு குடிநீர் பராமரிப்பு பணி காரணமாம்? 'தினமலர்' செய்தியால் அதிகாரிகள் திடீர் 'அலர்ட்'
சாலை விரிசலுக்கு குடிநீர் பராமரிப்பு பணி காரணமாம்? 'தினமலர்' செய்தியால் அதிகாரிகள் திடீர் 'அலர்ட்'
சாலை விரிசலுக்கு குடிநீர் பராமரிப்பு பணி காரணமாம்? 'தினமலர்' செய்தியால் அதிகாரிகள் திடீர் 'அலர்ட்'
ADDED : பிப் 01, 2026 07:00 AM

திருப்பூர்: திருப்பூர் - மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும், அவிநாசி - மேட்டுப்பாளையம் இடைபட்ட, 32 கி.மீ. இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் நடந்து வருகிறது.
இதில், அவிநாசி நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, அவிநாசி-ஆட்டையம்பாளையம் துவங்கி, நரியம்பள்ளி வரை நடக்கும் சாலை விரிவாக்கப்பணியில் பல இடங்களில், தரமற்ற முறையில் சாலைப்பணி மேற்கொள்ளப்படுகிறது என்ற புகார் இருந்து வருகிறது.
சாலையில், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் புதுப்பிக்கப்பட்ட சாலையோரம் மற்றும் நடுப்பகுதியில், விரிசல் ஏற்பட்டு, போடப்பட்ட தார் பெயர்ந்தது. இது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக,புகைப்படத்துடன் கூடிய செய்தி, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் வெளியானது.
இதையடுத்து, அன்றைய தினமே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்கள், புதுப்பிக்கப்பட்ட சாலையில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின், அந்த இடத்தை சுரண்டி எடுத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ள தயார்படுத்தி வருகின்றனர்.
'சாலையில் ஏற்பட்ட விரிசலுக்கு, அப்பகுதியில் நிலத்தடியில் பொருத்தப்பட்டுள்ள குழாய் உடைப்பு தான் காரணம்' என, நெடுஞ்சாலைத் துறையினர் காரணம் கூறுகின்றனர். 'அங்கு குடிநீர் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறது' என்பதை உணர்த்தும் வகையில், அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் நிதியில் சாலை பராமரிப்புப்பணி மேற்கொள்ளும் போது, இதுபோன்ற குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே முடித்து, அதன் பிறகுதான் சாலை அமைக்கும் பணி மேற்கொள்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், சாலை அமைக்கப்பட்ட பின், மீண்டும் அப்பகுதியை தோண்டி குழாய் பராமரிப்பு பணி செய்வதன் வாயிலாக, சாலையின் தரம் எந்தளவு இருக்கும் என்பது மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

