/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரிகளுக்கு எதிராக களமிறங்கிய கவுன்சிலர்கள்! உடுமலை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
/
அதிகாரிகளுக்கு எதிராக களமிறங்கிய கவுன்சிலர்கள்! உடுமலை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
அதிகாரிகளுக்கு எதிராக களமிறங்கிய கவுன்சிலர்கள்! உடுமலை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
அதிகாரிகளுக்கு எதிராக களமிறங்கிய கவுன்சிலர்கள்! உடுமலை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
ADDED : பிப் 04, 2024 02:20 AM

உடுமலை:உடுமலை ஒன்றிய குழு கூட்டத்தில், அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, தலைவர் உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், 26 ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றிய குழு தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த மகாலட்சுமி, துணை தலைவராக சண்முகவடிவேல் உட்பட, 18 தி.மு.க., ஒன்றிய குழு கவுன்சிலர்களும், ஆறு அ.தி.மு.க., மற்றும் தலா ஒரு இ.கம்யூ., - பா.ஜ., கவுன்சிலர் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று, ஒன்றிய குழு கூட்டம், தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணியம், பியூலா எப்சிபாய் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 42 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது.
கூட்டம் துவங்கியதும், தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்களும், எழுந்து நின்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஒன்றியத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை; மக்கள் பணிகள் முடங்கியுள்ளன. ஒன்றிய குழு கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை.
வளர்ச்சித்திட்ட பணிகளில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை, அரசின் நலத்திட்டங்களில் மக்களுக்கு கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
ஒன்றிய குழு கூட்டத்திற்கு, பிற துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஒன்றிய அலுவலகத்திலுள்ள அதிகாரிகளே பங்கேற்பதில்லை. கவுன்சிலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், புகார்களை கண்டு கொள்ளாததோடு, உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டி, மக்கள் பிரதிநிதிகளை அவமதிப்பு செய்கின்றனர்.
அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை. முறைகேடு அதிகரித்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்கள் முடங்கியுள்ளதால், ஒன்றிய நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
அதிகாரிகள் சமாதானத்தில் ஈடுபட்ட போதும், 'தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் அனுப்பி வைத்து, நிர்வாக குளறுபடிகள், அதிகாரிகள் மெத்தனப்போக்கு குறித்து விளக்கப்படும்,'' என கூறி, தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால், ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.