ADDED : ஆக 28, 2026 12:24 AM

பல்லடம்: கள்ள நோட்டுகளை அச்சடித்து, கடைகளில் மாற்றி வந்த கும்பலை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே, கவுந்தப்பாடிபுதுாரை சேர்ந்த குமரேசன், 40, ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர், ஊத்துக்குளியை சேர்ந்த ராஜா, 38.
இருவருக்கும் கடன் அதிகம் இருந்ததால், கள்ள நோட்டு அச்சடிக்க முடிவு செய்தனர்.
அதற்காக, 'கலர் பிரின்டர ் ' வாங்கிய குமரேசன், அவரது வீட்டிலேயே கள்ள நோட்டை அச்சடித்து, ராஜா, அவரது மனைவி ஜெயசக்தி, 27, ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
குமரேசன் பிரின்ட் எடுத்து தரும் நோட்டுகளை ராஜாவும், ஜெயசக்தியும் அருகில் உள்ள கடைகளில் மாற்றுவர்.
ஆக., 13ம் தேதி, பல்லடம் அடுத்த, சேடபாளையம் பகுதிக்கு வந்த ராஜா-, ஜெயசக்தி, மளிகை கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து, மளிகை பொருட்கள் வாங்கிச்சென்றனர். கே.அய்யம்பாளையம் பகுதி கடை ஒன்றிலும் கள்ள நோட்டுகளை மாற்றியுள்ளனர்.
இதை கண்டுபிடித்த கடை உரிமையாளர்கள், பல்லடம் போலீசாருக்கு தெரிவித்தனர். 'சிசிடிவி' காட்சி அடிப்படையில், போலீசார், ராஜா, ஜெயசக்தியை கைது செய்தனர். அதன்பின், குமரேசனையும் கைது செய்தனர்.
