/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிரினங்கள் தஞ்சம்; காக்குமா நெஞ்சம்?
/
உயிரினங்கள் தஞ்சம்; காக்குமா நெஞ்சம்?
ADDED : அக் 03, 2025 10:11 PM

மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, உலகில் விலங்கினங்கள் தோன்றிவிட்டன. உணவுச்சங்கிலி வாயிலாக, அவை இயற்கைக்கு உதவுவதால், காடுகளை வாழ்வாதாரமாக கொண்ட எண்ணற்ற உயிரினங்களை பாதுகாப்பது, ஒவ்வொருவரின் கடமை. இதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும், அக்., 4ல், உலக விலங்கு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நகரப்பகுதிகளில்கூட, பாம்பு, மயில் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. நாய்கள் இல்லாத வீதிகள் இல்லை. நகருக்குள் தவறி மான்கள் நுழைந்துவிடுகின்றன. உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனம் சூழ்ந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் பெருமளவில் உள்ளன; விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இரவு நேரங்களில், சாலையின் குறுக்கே, நெடுக்கே அவை ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்தை எதிர்கொள்கின்றனர்.உலக விலங்கு நாளில், விலங்குகள் பாதுகாப்பு என்பது முக்கியம் என்ற போதிலும், மனித - விலங்கு மோதல் சார்ந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. காடுகளில் இருந்து ஊடுருவும் விலங்குகளாக இருந்தாலும், அவற்றைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
மான்களைத் துரத்தும் நாய்கள்
தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் கூறியதாவது:
கிராமப்புற தோட்டத்து வீடுகளில் கிணறுகள் கைப்பிடி சுவர் இல்லாமல் கிணறுகள் உள்ளன. அவற்றில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் உணவு தேடி வந்து கிணற்றில் விழுகின்றன. எங்களிடம் உள்ள வலை உள்ளிட்ட உபகரணங்களின் உதவியால் அவற்றை மீட்கிறோம். கிரமப்புறங்களில் இருந்து உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் மான்களும், தெரு நாய்களின் விரட்டலுக்கு பயந்து, திக்குதிசைத்தெரியாமல் ஓடி கிணற்றுக்குள் விழுந்து விடுகின்றன. வலை உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீட்புப்பணி மேற்கொள்கின்றனர்.
வனப்பகுதிகளில் இருந்து ஏதேனும் சரக்கேற்றி வரும் லாரிகளில் வெள்ளெலி, ஆமை, எறும்புதின்னி, உடும்பு, கழுகு உள்ளிட்டவையும் பயணித்து, நகரப்பகுதிக்குள் வந்து விடுகின்றன; தகவலின் பேரில் அவற்றையும் மீட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுகிறோம். மேலும், உயரமான கட்டடங்களில் எவ்வித தொந்தரவு, இடையூறும் இல்லாத சூழல் இருப்பதால், ஆஸ்திரேலிய ரக ஆந்தைகள் அதிகளவில் தஞ்சம் புகுந்து, பல்கி பெருகுகின்றன. சில நேரங்களில், மக்களுக்கு இடையூறாக அவை மாறும் போது, அவற்றை மீட்கிறோம். மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளை பாதுகாப்பதிலும், அவற்றின் சீண்டலில் இருந்து மக்களை பாதுகாப்பதிலும் பங்களிக்கிறோம்.---