/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாட்பார்மில் எங்கு திரும்பினாலும் கூட்டம்
/
பிளாட்பார்மில் எங்கு திரும்பினாலும் கூட்டம்
ADDED : ஜன 15, 2024 12:40 AM

திருப்பூர்:'அம்ரித் பாரத்' திட்ட பணியால் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் குறுகலாக்கப்பட்ட நிலையில், ரயிலில் பயணிக்க பயணிகள் படையெடுத்ததால், எங்கு திரும்பினாலும் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு வந்த கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணிகள் கால்வைக்க கூட இடமில்லை. ஒருவரை ஒருவர் நெருக்கியபடி படிக்கட்டு வரை தொங்கிச் சென்றனர். அதிகாலை சென்னையில் இருந்து திருப்பூர் திரும்பிய சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸில் இருந்து தலா, 400 பேர் திருப்பூரில் இறங்கினர்.
நேற்று மதியம், பிலாஸ்பூர் - திருநெல்வேலி, கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தடுத்த நிமிடங்களில் திருப்பூர் வந்தது. இதனால், இரண்டாவது மற்றும் முதல் பிளாட்பார்மில் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளை ஒரே நேரத்தில் காண முடிந்தது.
'அம்ரித் பாரத்' திட்ட மேம்பாட்டு பணிக்கு, பிளாட்பார்மின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு, கட்டுமான பணி நடந்து வருவதால், அவ்விடம் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது பிளாட்பார்மில் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்வது போன்ற சூழல் உருவானது.