/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணைகள் நிரம்பியும் 'செயற்கை வறட்சி': பி.ஏ.பி., விவசாயிகள் கண்ணீர்
/
அணைகள் நிரம்பியும் 'செயற்கை வறட்சி': பி.ஏ.பி., விவசாயிகள் கண்ணீர்
அணைகள் நிரம்பியும் 'செயற்கை வறட்சி': பி.ஏ.பி., விவசாயிகள் கண்ணீர்
அணைகள் நிரம்பியும் 'செயற்கை வறட்சி': பி.ஏ.பி., விவசாயிகள் கண்ணீர்
ADDED : ஆக 01, 2024 05:01 PM

திருப்பூர்: 'பி.ஏ.பி., நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், நீர் மேலாண்மையில் உள்ள குறைபாடால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், நிரம்பி வழியும் நீர், கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது' என பி.ஏ.பி., விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
பரம்பிக்குளம், ஆழியாறு நீர்பாசன திட்டத்தின்(பி.ஏ.பி.,) கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுகிறது. இதில், கடைமடையாக உள்ள திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் பகுதியில், 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இந்த பாசன நீரை நம்பியுள்ளது; நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிபள்ளம் உள்ளிட்ட பி.ஏ.பி., நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கான்டூர் கால்வாய் பராமரிப்பு தாமதம்
இதற்கிடையில், கான்டூர் கால்வாயில் சிறிய அளவிலான பராமரிப்புப்பணி நடந்து வருகிறது; இப்பணியை விரைந்து முடிக்காததால், தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 'பணியை விரைந்து முடித்து, பாசனத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும்' என, பி.ஏ.பி., பாசன நீரை பயன்படுத்தும் பல்வேறு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைக்கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில் கிளை) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது;பருவமழையால் பி.ஏ.பி., நீராதார பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளது. கான்டூர் கால்வாய் சீரமைப்புபணியை நிறுத்தி, பாசனத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், சோலையாறு, துாணக்கடவு அணைகளில் இருந்து, கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கேரள அரசு, ஏற்கனவே பெரு மழையால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பி.ஏ.பி., அதிகாரிகளின் தவறான நீர் மேலாண்மையால், பி.ஏ.பி., பாசனத்துக்கான நீர் வினியோகம் தடைபட்டிருக்கிறது.
தண்ணீர் இருந்தும் கிடைக்கவில்லை
இந்நீரை நம்பியுள்ள கால்வாயின் கடைமடையாக உள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலுார், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, குண்டடம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல இடங்களில் கடும் வறட்சி ஏற்படுகிறது; கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இருந்தும், செயற்கை வறட்சி நிலவுகிறது. இந்த விஷயத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.